இலங்கை
வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளராக ஜெயந்தன் தெரிவு!

வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளராக ஜெயந்தன் தெரிவு!
யாழ்ப்பாணம் – வலிகாமம் மேற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக ஜெயந்தன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி. தேவநந்தினி பாபு தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் தவிசாளர் தெரிவுக்காக இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினர் ச.ஜெயந்தன் மற்றும் தமிழ் தேசிய பேரவையின் உறுப்பினர் சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
இதில் பகிரங்க வாக்கெடுப்பினை 18பேரும், 8 பேர் இரகசிய வாக்கெடுப்பினையும் கோரினர். அந்தவகையில் பெரும்பான்மை அடிப்படையில் பகிரங்க வாக்கெடுப்பு நடாத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது, க.ஜெயந்தனுக்கு 15 வாக்குகளும், சுப்பிரமணியம் தர்மலிங்கம் நந்தகுமார் 7 பெற்றனர். அந்தவகையில் ச.ஜெயந்தன் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.
ச.ஜெயந்தனுக்கு ஆதரவாக இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர்கள் 10 பேரும், ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் இரண்டுபேரும், ஐ.ம.சக்தியின் ஒரு உறுப்பினரும், சுயேட்சை குழுவின் ஒரு உறுப்பினரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தனர்.
தொடர்ந்து, உப தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது வே.சச்சிதானந்தம், க.இலங்கேஸ்வரன் ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. அந்தவகையில் கந்தையா இலங்கேஸ்வரனுக்கு 14 வாக்குகளும், வே.சச்சிதானந்தனுக்கு 8 வாக்குகளும் கிடைத்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர். அந்தவகையில் கந்தையா இலங்கேஸ்வரன் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.