
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 20/06/2025 | Edited on 20/06/2025

‘ரெட்ரோ’ படத்தை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வந்தார் சூர்யா. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்காமல் இருந்தது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு முதலில் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக இருந்து பின்பு இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் கமிட்டானார். படத்திற்கான படப்பிடிப்பு கோவையில் பூஜையுடன் கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சூர்யாவின் காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அவர் தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நாயகியாக த்ரிஷா நடிக்க, லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகா, மலையாள நடிகர் இந்திரன்ஸ் இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ஷிவதா, நட்டி, சுப்ரீத் ரெட்டி மற்றும் அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடித்து வந்தனர். இப்படம் குறித்து சமீப காலமாக எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்தது. பின்பு சமீபத்தில் படத்தின் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் படத்தின் டைட்டில் தற்போது ஒரு போஸ்டருடன் வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு ‘கருப்பு’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் சூர்யா கையில் அருவா வைத்துக் கொண்டு ஒரு கோயிலின் முன்பு நிற்கிறார். ஆனால் அவர் உருவம் மட்டும் தெரியும் படி டிசைன் செய்யப்பட்டுள்ளது. இன்று பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பிறந்தநாள் என்பதால் அவருக்கும் வாழ்த்து தெரிவித்து போஸ்டரை படத் தயாரிப்பு நிறுவனம் அவர்களது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.