
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 20/06/2025 | Edited on 20/06/2025

சிம்பு, தக் லைஃப் படத்திற்கு பின்பு பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். சிம்புவின் 49வது படமாக உருவாகும் இப்படத்தில் சந்தானம் காமெடி கலந்த முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பூஜை கடந்த மாதம் போடப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதற்கு காரணமாக படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் டாஸ்மாக் ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் சிக்கியிருப்பதாக சொல்லப்படுவதால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இப்படத்தை தவிர்த்து 50வது படமாக தேசிங் பெரியசாமி இயக்கத்திலும் இதை முடித்துவிட்டு டிராகன் பட இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கான அறிவிப்பு முன்னதாக வெளியாகியிருந்தது. இந்த சூழலில் சமீபத்தில் தக் லைஃப் படத்திற்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிப்பதாகவும் முழுக்க காதலை மைய்யப்படுத்தி இப்படம் உருவாகுவதாகவும் கூறப்பட்டது. அதோடு படப்பிடிப்பு உடனடியாக தொடங்கவிருப்பதாகவும் இந்த படத்தை முடித்துவிட்டுத்தான் ஏற்கனவே அவர் கமிட்டான படங்களில் நடிக்கவுள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் சிம்பு அடுத்து வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை தாணு தயாரிக்க கேங்ஸ்டர் ஜானரில் படம் உருவாகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இதற்கு முன்னால் பட அறிவிப்பு இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இதற்காக சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு புரொமோ ஷூட் நடந்தது. இதில் இயக்குநர் நெல்சனும் நடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அந்த புரொமோ அறிவிப்பு வீடியோ வருகின்ற 25ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் பணிகள் வேகமெடுத்து வருவதால் சிம்பு ரசிகர்களும் வெற்றிமாறன் ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். வெற்றிமாறன், விடுதலை 2 படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து வாடிவாசல் பட பணிகளை கவனித்து வந்திருந்தார். ஆனால் அது டிராப் என்றும் அதனால் தான் இந்தப் படத்தை அவர் ஆரம்பித்தார் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.