இலங்கை
வாகனங்களில் அலங்காரங்களை அகற்ற நடவடிக்கை

வாகனங்களில் அலங்காரங்களை அகற்ற நடவடிக்கை
அனுமதியின்றி வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற உதிரிபாகங்களை அகற்றும் விசேட நடவடிக்கை ஜூலை மாதம் 1ம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்பட உள்ளது.
இதனை வாகன போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்புக்கான உப பொலிஸ் பரிசோதகர் (DIG) இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் அறிவித்தலின்படி, இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த விசேட நடவடிக்கையின் போது, வாகனங்களில் அனுமதியின்றி பொருத்தப்பட்டுள்ள அதீத ஒளி விளக்குகள், அதீத ஒலிகளை வெளியிடும் ஸ்பீக்கர்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் போன்ற உதிரிபாகங்கள் அகற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தேவையற்ற உதிரிபாகங்கள், விபத்துகள் நேரும்போது வீதி பயணிகளுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.
அதேவேளை 2024ஆம் ஆண்டில் மாத்திரம் 815 பேர், குறிப்பாக நடைபயணிகள், வீதி விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஆண்டில் 18 முதல் 28 வயதுக்கிடையில் உள்ள சுமார் 800 மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் மற்றும் பின்னால் அமர்ந்திருந்தோர் உயிரிழந்தனர்.
மேலும் , இந்த ஆண்டில், வீதி போக்குவரத்து திணைக்களம் 8,788 வாகனங்களை பொது வீதிகளில் ஓட்டத் தகுதி இல்லாதவை என அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.