இந்தியா
புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 40 நாட்களுக்குப் பிறகும் சீருடை வழங்கவில்லை… மாணவர்கள் சிரமம்

புதுச்சேரியில் பள்ளிகள் திறந்து 40 நாட்களுக்குப் பிறகும் சீருடை வழங்கவில்லை… மாணவர்கள் சிரமம்
பள்ளிகள் திறக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் சீருடைகள் இதுவரை வழங்கப்படாததால் பழைய சீருடைகளை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து வருகிறார்கள். புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறையின் கீழ் புதுவை, காரைக்கால்,மாகி, ஏனாம் பகுதியில் மொத்தம் 294 முன் மழலையர் பள்ளிகள் உள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் தொடக்கப்பள்ளிகள் – 236, நடுநிலைப்பள்ளிகள் – 48, உயர்நிலைப்பள்ளிகள் – 73, மேல்நிலைப் பள்ளிகள் – 58, சிறப்பு பள்ளிகள் புதுவை, காரைக்காலில் தலா ஒன்று உள்ளன. 1 முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலில் இருந்து வருகிறது. இதனால் நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதன்பின் மே மாதம் கோடை விடுமுறை விடப்பட்டு, மீண்டும் பள்ளிகள் கடந்த 2-ம் தேதி திறக்கப்பட்டன.சலுகைகளால் சேர்க்கை அதிகரிப்பு அரசுபள்ளிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதாவது மாணவ, மாணவிகளுக்கான சீருடை, நோட்டு, புத்தகம், சிறப்பு பஸ், சைக்கிள், மடிக்கணினி உள்ளிட்டவைஇலவசமாக வழங்கப்படுகின்றன.இதேபோல், நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு ‘ஸ்கூல் பேக், ஷூ ஆகியவையும் வழங்கப்பட உள்ளன. அரசின் இந்த சலுகைகளால் ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதிக பணம் கொடுத்து தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்ப்பதை விட சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் சலுகைகளுடன் அரசு பள்ளிகளில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.சீருடை வழங்கவில்லைபள்ளிகள் திறக்கப்பட்டு 40 நாட்களுக்கு மேலாகியும் சீருடைகள் இதுவரை வழங்கப்படாததால் பழைய சீருடைகளை மாணவர்கள் பள்ளிக்கு அணிந்து வருகிறார்கள். இதனால் சில மாணவர்களின் சீருடைமோசமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இதேபோல் ஒருசில வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்களும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், நாள்தோறும் பள்ளி ஆசிரியர்களிடம் எப்போது நோட்டு-புத்தகம், சீருடைகள் வழங்கப்படும் என பெற்றோர் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு பதில் தரமுடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். இது சில நேரத்தில் வாக்குவாதத்தில் முடிகிறது.அதிகாரி சொல்வது என்ன?இது பற்றி பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘அரசு பள்ளி மாணவர்களுக்கான சி.பி.எஸ்.இ. பாட புத்தகங்கள் பெங்களூருவில் இருந்து வரவழைத்து விநியோகம் செய்யப்படுகிறது. அதன்படி பெரும்பாலான வகுப்புகளுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுவிட்டன. நடப்பாண்டில் பாடத் திட்டங்கள் மாற்றம் செய்யப்பட்ட சில வகுப்புகளுக்கான புத்தகங்கள் மறுபதிப்பு செய்துவருவதற்கு காலதாமதமாகிறது. இம்மாத இறுதிக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புத்தகங்கள் வழங்கப்பட்டு விடும். ‘ஷூக்கள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த ‘ஷூக்கள் அடுத்த மாதம் (ஜூலை) அனைவருக்கும் வழங்கப்படும்’ என்றார்.கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தில் ஒரு வகுப்புக்கு 30 மாணவர்கள் தான் சேர்க்க வேண்டும். ஆனால் சில வகுப்புகளில் 50 பேர் வரை உள்ளனர். இதனால் அந்த வகுப்புகளை 2 பிரிவாக பிரித்து கூடுதல் ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.செய்தி: பாபு ராஜேந்திரன்