பொழுதுபோக்கு
‘லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்’; இளமைப்பருவ சுவாரசிய சம்பவத்தை நினைவுகூர்ந்த விஜய்

‘லெட்டர் எழுதி வைத்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினேன்’; இளமைப்பருவ சுவாரசிய சம்பவத்தை நினைவுகூர்ந்த விஜய்
விஜய் திட்டமிட்டபடி அனைத்தும் நடந்தால், அடுத்த ஆண்டு ஜூன் 22-ஆம் தேதியை “திரை நட்சத்திரம்” விஜய்யின் பிறந்தநாளாக நாம் கொண்டாட முடியாமல் போகலாம். அடுத்த ஆண்டு இந்த நேரத்தில், ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படமான ‘ஜன நாயகன்’ வெளியாகியிக்கும். அவர் இனி “தளபதி” விஜய் அல்ல; தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனத் தலைவர் மட்டுமே. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் 1992-ஆம் ஆண்டு தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான விஜய், அதற்கு முன்பு குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் தோன்றியுள்ளார். இந்த ஆண்டு 51 வயதை எட்டும் விஜய், தற்போது நாட்டின் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் மன்னர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். ‘புலி’ (2015) படத்திற்கு பிறகு ஒரு தோல்விப் படம் கூட இல்லாமல், ‘பீஸ்ட்’ (2022), ‘வாரிசு’ (2023) மற்றும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT, 2024) போன்ற கலவையான விமர்சனங்களைப் பெற்ற படங்களும் நல்ல வசூலைக் குவித்துள்ள நிலையில், விஜய் தற்போது நாட்டின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவராகத் திகழ்கிறார். எனவே, அவர் தற்போது திரைப்படங்களில் இருந்து விலகும் முடிவு பலருக்கும் அதிர்ச்சியையும், அவரது ரசிகர்களுக்கு மன வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.விஜய்யை திரையுலகில் அறிமுகப்படுத்தியது அவரது தந்தைதான் என்றாலும் — குழந்தை நட்சத்திரமாக அவரது முதல் தோற்றம் ‘வெற்றி’ (1984) திரைப்படத்தில் இருந்தது, அந்தப் படத்தையும் சந்திரசேகர்தான் இயக்கினார். தன்னை ஒரு கதாநாயகனாக அறிமுகப்படுத்த தனது தந்தை ஆரம்பத்தில் தயங்கினார் என்று விஜய் முன்பு ஒருமுறை கூறி இருந்தார். இதனால் விரக்தியடைந்த விஜய், தனது பெற்றோர்கள் தன்னைத் தேட வேண்டாம் என்று ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இருப்பினும், இந்தச் சம்பவம் ஒரு நகைச்சுவையான திருப்பத்துடன் முடிந்தது.”நான் படிப்பில் பெரிய அளவிற்கு சிறந்து விளங்கவில்லை. வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதால், திரைப்படங்களில் என்னை அறிமுகப்படுத்துமாறு என் தந்தையிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் முடியாது என்று கூறிவிட்டார். இதுவும் ஒரு போராட்டமாக இருந்தது. வீட்டை விட்டு எங்கே போவது? அதனால், நான் உதயம் தியேட்டருக்குச் சென்று ஒரு படம் பார்த்துவிட்டு திரும்பி வரலாம் என்று திட்டமிட்டேன். எனினும், ஒரு பில்ட்-அப் கொடுப்பதற்காக, ஒரு கடிதத்தை விட்டுச் சென்றேன். இரண்டு மணி நேரத்தில் திரும்பி வரும் திட்டம் இருந்தது. இருப்பினும், படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, நான் உதயம் தியேட்டரில் இருப்பதை என் தந்தை கண்டுபிடித்துவிட்டார். அவர் வந்து என்னை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்” என்று விஜய் ஒருமுறை ஸ்டார் விஜய்யின் ‘காஃபி வித் அனு’ நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.சுவாரஸ்யமாக, சந்திரசேகரும் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார். அவரது கூற்றுப்படி, விஜய் காலை 10 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறி பல மணி நேரம் திரும்பவில்லை, மாலை தான் அவரைக் கண்டுபிடித்தார்கள். விஜய்யின் இளைய சகோதரி இரண்டு வயதில் ரத்தப் புற்றுநோயால் இறந்த பிறகு, விஜய்யை ஒரு மருத்துவராக்க தாம் விரும்பியதாக சந்திரசேகர் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் நடந்த போது விஜய்க்கு 10 வயது இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.”அவர் நடிகராக வேண்டும் என்று என்னிடம் சொன்னபோது, நான் மறுத்துவிட்டேன். ஒரு நாள், காலை பத்து மணிக்கு வீட்டை விட்டு விஜய் வெளியேறினார். மாலை வரையிலும் அவர் திரும்பவில்லை. தன்னை தேட வேண்டாம் என்று லெட்டர் எழுதி வைத்து விட்டு விஜய் சென்று விட்டார். நானும், என் மனைவியும் அனைத்து இடங்களிலும் தேடினோம். கடைசியில் நான் உதயம் தியேட்டருக்குச் சென்றேன். அங்கு என்னை அடையாளம் கண்ட காவலாளி, உங்கள் மகன் உள்ளே படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார்” என 2018-ஆம் ஆண்டு ஸ்க்ரோல்.இன் நேர்காணலின் போது சந்திரசேகர் கூறியிருந்தார்.