இலங்கை
இரு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் இருப்பில் தாராளம்;

இரு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் இருப்பில் தாராளம்;
செயற்கைக் தட்டுப்பாட்டை ஏற்படுத்தவேண்டாம் என பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் கோரிக்கை!
நாட்டில் இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள்கள் இருப்பில் உள்ளன. வடமாகாணத்துக்கும், யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கும் போதியளவு எரிபொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனவே வரிசைகளில் நின்று தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தவேண்டாம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபன அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்காவால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, பாரசீக ஜலசந்தியை முடக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது. இதனால், பெற்றோலுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம். என்ற அச்சத்தில் மக்கள் வரிசையில் நின்று நேற்றுப் பெற்றோலைக் கொள்வனவு செய்தனர். இதையடுத்தே, பெற்றோல் போதியளவு இருப்பில் உள்ளது என்று பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:-
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை. போதுமான எரிபொருள் இருப்பு பேணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பகுதிகளில் எரிபொருள் வரிசைகள் இல்லாவிடினும், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனேகமானவர்கள் வரிசைகளில் நின்று எரிபொருள் நிரப்புவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான தவறான முன்னுதாரணங்களை வழங்க வேண்டாம் என்று மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம். யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு இன்று இரவு (நேற்று) எரிபொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் நாள்களில் அடுத்தகட்ட விநியோகங்களும் மேற்கொள்ளப்படவுள்ளன – என்றனர்.