இலங்கை
நைஜீரியாவில் இருந்து பெற்றோலியப் பொருள்; ஆராய்கின்றது இலங்கை

நைஜீரியாவில் இருந்து பெற்றோலியப் பொருள்; ஆராய்கின்றது இலங்கை
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துவருவதாலும், எரிபொருள் விநியோகச் சங்கிலியில் சீர்குலைவு ஏற்படும் என்ற கவலைகளாலும், நைஜீரியாவிலிருந்து பெற்றோலியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இலங்கை முடிவுசெய்துள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார் .
இஸ்ரேல் – ஈரான் பதற்றங்கள் அதிகரித்துவருகின்றன. இந்த மோதலில் அமெரிக்காவின் ஈடுபாடு காரணமாக எரிபொருள் விநியோகத்தில் புதிய நிச்சயமற்ற தன்மை உருவாகியுள்ளது. இந்த நிலைமை தொடர்பாகக் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்த இலங்கைப் பெற்றோலியக் கூட் டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா, நைஜீரியா மற்றும் வேறு சில எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து மாதிரிப் பொருள்களைப் பெற்று, உள்ளூர் ஆய்வகங்களில் நம்பகத் தன்மையைச் சோதிப்பதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
விநியோகச் சங்கிலியில் ஏற்படும் இடையூறுகளிலிருந்து இலங்கைக்கு ஏற்படும் எந்தவொருதாக்கத்தையும் தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூர்சந்தையில் உடனடிதாக்கம் எதுவும் ஏற்படாது என்று தெரிவித்துள்ள அவர். தற்போதைய உலகளாவிய சீர்குலைவின் விளைவு எதிர்வரும் ஓகஸ்ட் அல்லது செப்ரெம்பர் மாதத்துக்குள் உணரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ரஷ்யா இலங்கையுடன் எண்ணெய் வர்த்தகத்தை முன்னெடுக்க முன்வந்துள்ளது. இருப்பினும், பொருளாதாரத் தடைகள் மற்றும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இலங்கை கொள்கையளவில் அதற்கு உடன்பாட்டைக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.