இந்தியா
பொதுப்பணித் துறை தலைமை அலுவலகம் மீது தக்காளி வீச்சு: போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கைது செய்த புதுச்சேரி போலீசார்

பொதுப்பணித் துறை தலைமை அலுவலகம் மீது தக்காளி வீச்சு: போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை கைது செய்த புதுச்சேரி போலீசார்
புதுச்சேரியில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் மீது தக்காளியை வீசி போராட்டத்தில் ஈடுபட்ட பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் 2015-ம் ஆண்டு பொதுப்பணித்துறையில் 2642 பேர் பணிக்கு அமர்த்தபட்டனர். தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது பணிக்கு அமர்த்தபட்டதால் தேர்தல் ஆணையத்தால் 2016 ஆம் ஆண்டு 2642 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.இவர்கள் மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால் கடந்த 8 ஆண்டுகளாக இவர்களுக்கு பணி வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பணி நீக்கம் செய்யப்பட்ட 2642 பேருக்கும் மீண்டும் பணி வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.ஆனால் இதுவரை அந்த அறிவிப்பு செயல்படுத்தப்படவில்லை இதனை கண்டித்தும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 8 ஆண்டு காலம் தங்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காத புதுச்சேரி அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பிய ஊழியர்கள் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் மீது தக்காளியை வீசி தங்களை எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீசார் தடுக்க முயலவே இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து ஊழியர்கள் தக்காளியை வீசிக்கொண்டே இருந்ததால் பொதுப்பணித்து தலைமை அலுவலகத்தில் கதவுகள் மூடப்பட்டது. இதனால் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.செய்தி: பாபு ராஜேந்திரன்.