இந்தியா
‘போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை’; டிரம்ப் அறிவிப்பை திட்டவட்டமாக மறுத்த ஈரான்

‘போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை’; டிரம்ப் அறிவிப்பை திட்டவட்டமாக மறுத்த ஈரான்
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த நிலையில், ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும், இஸ்ரேல் தனது “சட்டவிரோத தாக்குதலை” நிறுத்தினால், தாக்குதல்களை தொடரும் எண்ணம் ஈரானுக்கு இல்லை என்றும் சூசகமாக தெரிவித்துள்ளது. இந்த முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பில், “இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன” என்று தெரிவித்திருந்தார். இது உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, “இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக எந்தவிதமான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை” என்று திட்டவட்டமாக மறுத்தார்.அதே சமயம், அவர் தனது அறிக்கையில், “இஸ்ரேல் தனது சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்தினால், அதன்பிறகு பதிலடி கொடுக்கும் நோக்கம் ஈரானுக்கு இல்லை” என்றும் குறிப்பிட்டார். இது ஒரு நிபந்தனையுடன் கூடிய அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பிற்கு ஈரான் முடிவு செய்துள்ளதை காட்டுகிறது. ஆனால், இந்த விவகாரம் குறித்து இஸ்ரேல் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.இந்த போர் நிறுத்த அறிவிப்புக்கு முக்கிய காரணமாக, நேற்று (ஜூன் 23) இரவு கத்தாரில் உள்ள அமெரிக்காவின் அல் உதித் விமானத் தளம் மீது ஈரான் நடத்திய சரமாரி ஏவுகணை தாக்குதல் என்று கருதப்படுகிறது. மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க விமானத் தளமான இது தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல நாடுகள் தங்கள் வான்பரப்பை தற்காலிகமாக மூடின.கத்தாரின் தலைநகர் தோஹா மீது, அமெரிக்க விமான தளங்களை குறிவைத்து ஆறு ஏவுகணைகளை ஈரான் ஏவியது என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. நேற்று (ஜூன் 24) மதியம் முதலே அல் உதித் விமானத் தளத்திற்கு ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் இருந்ததாக மேற்கத்திய தூதர் ஒருவர் உறுதிப்படுத்தினார். இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் குடிமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.இந்த மோதலின் தாக்கம் பிராந்தியம் முழுவதும் உணரப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்களின் இயக்கம் சீராக இருந்தாலும், அச்சுறுத்தல் அதிகமாகவே உள்ளதாக கூறப்படுகிறது. ஜோர்டான் தலைநகரில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) ஒன்று விழுந்து நொறுங்கியதில் சேதம் ஏற்பட்டது. இதனிடையே, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ஆயுத கிடங்குகளுக்கு அருகே செல்ல வேண்டாம் என பொதுமக்களை இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.இந்த மோதல் சர்வதேச அளவிலும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. தெஹ்ரானில் உள்ள எவின் சிறை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை பிரான்ஸ் வன்மையாகக் கண்டித்துள்ளது. அதேவேளை, இஸ்ரேலுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுப்பதை இத்தாலி எதிர்த்துள்ளது. ஜெர்மனி, தற்போதைக்கு தங்கள் நாட்டில் பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளது.இந்த பதற்றமான சூழலுக்கு இடையே, இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் ஐரோப்பியர் ஒருவரை ஈரான் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.