இலங்கை
“அணையாவிளக்கு” போராட்டத்தின் இறுதி நாள்!

“அணையாவிளக்கு” போராட்டத்தின் இறுதி நாள்!
செம்மணி படுகொலைக்கு நீதிகோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையாவிளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்றது.
மக்கள் செயல் அமைப்பின் ஏற்பாட்டில் அணையா விளக்கு போராட்டம் எனும் தொனிப் பொருளில் சர்வதேச நீதி கோரி நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டம் இரவு பகலாக நடைபெற்று மூன்றாவது நாளான இன்று மிகவும் எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய இன்று காலையில் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்தும் அணையா விளக்குப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இப்போராட்டத்தில் மதத் தலைவர்கள், பொது அமைப்புக்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதி நாள் போராட்டமாக நடைபெறுகிற இன்றைய போராட்டத்தில் வடக்கு-கிழக்கில் இருந்து பெருமளவிலானோர் கலந்து கொளண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். இதன் போது ஐ.நா ஆணையாளர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும் அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று போராட்டத்தின் மனு ஒன்றும் ஆணையாளரிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டம் நடைபெறும் இடத்திற்கு ஆணையாளர் நேரடியாக வருகிறாரா இல்லையா என்பது தொடர்பாக உறுதியாக எதுவும் அறிவிக்கப்படவில்லை.