இலங்கை
மனிதப் புதைகுழிகளுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்; ஈ.பி.டி.பி. தெரிவிப்பு

மனிதப் புதைகுழிகளுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்; ஈ.பி.டி.பி. தெரிவிப்பு
வடக்கு – கிழக்கில் காணப்படும் அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பாகவும் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு சூத்திரதாரிகள் யார் என்பது வெளிப்படுத்தப்படவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்ச்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகசந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், 90ஆம் ஆண்டு காலப்பகுதியில் மண்டைதீவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் படுகொலைகள் மற்றும் காணாமற்போனமை போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக எமது தலைமையை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இப்பொழுது மண்டைதீவு விவகாரத்தில் அக்கறை கொள்ளுகின்ற அவர், நல்லாட்சிக் காலத்தில் என்ன செய்துகொண்டிருந்தார்? அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் அளித்திருக்க வேண்டும். ஆனால் நல்லாட்சிக் காலத்தில் குறித்த விவகாரத்தில் எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை. ஆக, தற்போது மண்டைதீவு பற்றி கதைப்பது அரசியல் நோக்கம் கொண்டதென்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.
செம்மணி மனிதப் புதைகுழி உட்பட அனைத்து புதைகுழிகளிலும் வெளிப்படையாக அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு, உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அவை தொடர்பாக சுயாதீனமான நீதி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அவை எந்தக் காலப்பகுதியில் புதைக்கப்பட்டன. அவற்றுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார்? போன்ற விடயங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப் பாடு – என்றார்.