இலங்கை
“அணையா விளக்கில்” அமைச்சரை தடுத்தது தவறு – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி தெரிவிப்பு!

“அணையா விளக்கில்” அமைச்சரை தடுத்தது தவறு – வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவி தெரிவிப்பு!
செம்மணி மனிதப் புதைகுழிக்கான போராட்டத்தில் கலந்துகொள்ள வருகை தந்த அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் வருகை தந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்டர் ரட்க்கை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:- செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உரிய முறையில் விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதனை வலியுறுத்தி இடம்பெற்ற போராட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் கலந்து கொண்டிருந்த வேளையில் சிலர் அவரை தடுத்தனர் அது தவறு அதற்கு நாம் மனம் வருந்துகிறோம். செம்மணி மனிதப்புதைகுழிக்கு நீதி வேண்டி போராடும் தாய்மார்கள் என்ற வகையில் எமது நீதிக்கான பயணத்தில் ஒன்றிணைவபவர்களை புறக்கணிப்பது எமது நோக்கம் அல்ல. அமைச்சர் எமது போராட்டத்திற்கு வருகை தந்தது நீதியை எதிர்பார்த்து காத்திருக்கின்ற எமக்கு சாதகமான விடயம் அவரும் இந்த போராட்டத்திற்கு கலந்து கொண்டவராய் பொறுப்பு கூறுவதாக இருக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.