இலங்கை
செம்மணி மயானத்தில் இன்று மீண்டும் அகழ்வுப் பணி

செம்மணி மயானத்தில் இன்று மீண்டும் அகழ்வுப் பணி
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின்றன.
செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் தொடர்பான வழக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
அகழ்வுப் பணிகளுக்காக நிதி விடுவிக்கப்பட்ட நிலையில் திட்டமிட்டபடி ஜூன் மாதம் 26ஆம் திகதியன்று (இன்று) அகழ்வுகளை ஆரம்பிக்க எந்தத் தடங்கலும் இல்லை என்றும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில், கடந்த பெப்ரவரி மாதம் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய அண்மையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றன.
மூன்று குழந்தைகளின் மனிதச் சிதிலங்கள் உட்பட 19 மனிதச் சிதிலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தப் புதைகுழி மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
‘மனிதப் புதைகுழி’ என்ற அடையாளப்படுத்தலுக்கு அமைய இன்று அகழ்வுப் பணிகள் மீண்டும் தொடரவுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கு நேற்று (25) வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், செம்மணி மனிதப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.