பொழுதுபோக்கு
தமிழ் சினிமாவில் போதைப்பொருள்? ‘இன்று, நேற்று அல்ல’- விஜய் ஆண்டனி நச் பதில்

தமிழ் சினிமாவில் போதைப்பொருள்? ‘இன்று, நேற்று அல்ல’- விஜய் ஆண்டனி நச் பதில்
தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவரின் நடிப்பில் வெளிவந்த சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில், விஜய் ஆண்டனி தற்போது ‘அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், இன்று நேற்று நாளை, மாயவன்’ உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்கத்தில் ‘மார்கன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் நாளை வெள்ளிக்கிழமை (ஜூன் 27) திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், இப்படத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சிக்காக விஜய் ஆண்டனி கோவை வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், “மார்கன் படம் ஜூன் 27 ரிலீஸ் ஆக உள்ளது. படம் சிறப்பாக உள்ளது. இதன் இயக்குனர் லியோ ஜானிடம் எக்ஸ்ட்ரா ஒரு விசயம் உள்ளது. இதில் என்னுடைய சகோதரி மகனும் நடத்துள்ளார். அடுத்த படமாக சத்தியதிருமகன், பிச்சைக்காரன் 2, சலீம் 2 உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளேன். கிரிப்பிங் ஸ்டோரி, யாருமே எதிர்ப்பாக்காத விசயமாக இருக்கும். படம் பார்க்க வருபவர்களுக்கு ஒரு எண்டர்டைம்ஸ்சாக இருக்குனுனு விரும்புவேன். ஆனாலும்,என்னை அறியாம ஒரு மெசேஜ் வந்து விடும். அதேபோல் இந்த படத்திலேயேயும் முக்கிய கருத்து உள்ளது. ஆக்டிங், புரோடக்சன் வந்த பிறகு மியூசிக் கவனம் குறைந்து விட்டது. இப்போது வீட்டிலேயே தியேட்டர் கட்டி வைத்துள்ளேன், அங்கு மியூசிக் பண்ணிக்கிறேன். இந்த படத்தை தொடர்ந்து லாயர், பிச்சைக்காரன் 2, சலீம் 2 படங்களுக்கும் நானே மியூசிக் பண்ண போகிறேன்.” என்று விஜய் ஆண்டனி தெரிவித்தார். தொடர்ந்து, போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர், நடிகைகள் தொடர்பு குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய அவர், “போதைப்பொருள் பழக்கம் இன்றைக்கு நேற்று அல்ல தொடர்ந்து உள்ளது. அரசு எல்லாத்துக்கும் பொறுப்பேத்துக்கனுனு சொல்ல முடியாது, அவர்கள் இதைக் கட்டுப்படுத்த வேண்டும். நடிகர் ஸ்ரீகாத் நல்ல நடிகர். காக்கி படத்தில் அவருடன் பழகி நடித்துள்ளேன்” என்று விஜய் ஆண்டனி தெரிவித்தார்.