இலங்கை
கடலில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு

கடலில் காணாமல் போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் மீட்பு
கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன பல்கலைக்கழக மாணவனின் சடலம் இன்று (27) கரையோதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
26 ஆம் திகதி (வியாழக்கிழமை) காலை சக பல்கலைக்கழக மாணவர்களுடன் கடல் உயிரினங்களை பார்வையிடுவதற்காக சென்றிருந்த மாணவர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடலினுள் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போன மாணவர் தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து சுழியோடிகளின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்றையதினம் பிற்பகல் மாணவனின் சடலம் கொழும்பு துறைமுக நகர கடற்கரையில் கரையொதுங்கியது.
சம்பவத்தில் 24 வயதுடைய அஸ்கிரிய கம்பஹா பகுதியை சேர்ந்த கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர் குழுவொன்று பொழுதுப் போக்குக்காக ஸ்னோர்கெல் என்னும் நீரினுள் சுவாசிக்க உதவும் கருவியை அணிந்து கடலின் உற்பகுதியை பார்வையிட்டுள்ளார்.
இதன் போதே, குறித்த மாணவர் காணாமல் போயுள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
அம்மாணவர் அணிந்திருந்த ஸ்னோர்கெல் கருவி உயிர் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன்,
மேலும் கொழும்பு துறைமுகப் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.