இந்தியா
மே. வங்கத்தில் மீண்டும் ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 மாணவர்கள் கைது

மே. வங்கத்தில் மீண்டும் ஒரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 3 மாணவர்கள் கைது
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் காஸ்பா பகுதியில் மாநில அரசு நடத்தும் சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவரை 3 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, திரிணாமுல் மாணவர் பிரிவின் முன்னாள் நிர்வாகி உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தேர்வு தொடர்பாக படிவங்களைச் சமர்ப்பிக்க, புதன்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் கல்லூரி வந்த 24 வயதான மாணவியை, அதே கல்லூரியில் படிக்கும் 2 மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர் ஒருவரும் சேர்ந்து கல்லூரி பாதுகாப்பு காவலரின் அறைக்குள் மாணவியை அடைத்து, இரவு 7.30 முதல் 10.50 மணியளவில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணையில் தெரிய வந்தது.இந்த சம்பவம் குறித்து, கஸ்பா காவல் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில், ஜயிப் அகமது (19), பிரமித் முகர்ஜி (20) மற்றும் முன்னாள் மாணவரும் கல்லூரியில் திரிணமூல் காங்கிரஸின் மாணவர் பிரிவின் முன்னாள் தலைவருமான மோனோஜித் மிஸ்ரா (31) ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கஇந்தச் சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என குற்றவாளிகள் மாணவியை மிரட்டியுள்ளனர். எனினும், நடந்த சம்பவத்தை மாணவி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, மனோஜித் மிஸ்ரா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகவும், மற்ற இருவரும் கதவை வெளிப் புறமாகப் பூட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொல்கத்தா இணை ஆணையர் ரூபேஷ்குமார் கூறுகையில், மிஸ்ரா மற்றும் அகமது வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாகவும், முகர்ஜி வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். குற்றவாளிகள் 3 பேரின் அலைபேசிகளையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் பல விவரங்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து ஒரு அதிகாரி தெரிவித்ததாவது: “புதன்கிழமை இரவு 7.30 முதல் 10.50 மணி வரை கல்லூரி கட்டிடத்தின் தரை தளத்தில் உள்ள காவலாளி அறைக்குள் 3 பேரும் பாதிக்கப்பட்ட பெண்ணை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கேயே பாலியல் வன்கொடுமை நடந்ததாக புகாரளித்துள்ளார்.”அதிகாரி மேலும் கூறுகையில், “பாதிக்கப்பட்டவருக்கு முதற்கட்ட மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டு அவர்களது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. குற்றம் நடந்ததாகக் கூறப்படும் இடம் பார்வையிடப்பட்டு, தடயவியல் பரிசோதனைக்காகப் பாதுகாக்கப்பட்டுள்ளது,” என்றார்.கைது செய்யப்பட்ட மூவரையும் அலிபூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய காவல்துறையினர், 14 நாள்கள் காவலில் வைக்கக்கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) வரை மட்டுமே காவல் அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், மனோஜித் மிஸ்ரா வழக்கறிஞர், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், “அரசியல் மோதலின் காரணமாக சிக்கவைக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.கொல்கத்தா சட்டக் கல்லூரியில் நடந்ததாகக் கூறப்படும் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கொல்கத்தா காவல்துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்டதாவது: “புகார் பதிவு செய்யப்பட்டவுடன், எந்தத் தாமதமும் இன்றி முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டது. புகார் அளித்த 12 மணி நேரத்திற்குள் புகாரில் குறிப்பிடப்பட்ட 3 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஜூலை 1 ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் மிகுந்த தீவிரத்துடனும், உணர்வுபூர்வமாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதித்துறை செயல்முறைக்குத் தடையாகவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களின் கண்ணியத்திற்குப் பங்கம் விளைவிப்பதாகவோ இருக்கும் தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கும், டிஜிட்டல் தளங்களுக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்.” என்று கூறப்பட்டுள்ளது.கடந்தாண்டு, ஆகஸ்ட் மாதத்தில் ஆர்ஜி மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தற்போது சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.