இலங்கை
ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடா? சபைக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்த தவிசாளர்

ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடா? சபைக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்த தவிசாளர்
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபையில் நடைபெற்ற ஒப்பந்தம் திறத்தலின் போது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட ஒப்பந்த காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரியப்படுத்தி உள்ளனர்.
கடந்த 02.06.2025 அன்று ஏறாவூர் பற்று பிரதேச சபையின் ஊடாக ஒப்பந்த வேலைகளுக்கான கேள்வி பத்திரம் பத்திரிகைகள் ஊடாக கோரப்பட்டிருந்தது. குறித்த கேள்வி பத்திரம் கோரியதில் 2025 க்கு 2024 என அச்சிடப் பட்டிருந்த தாகவும் இதனால் குறித்த கேள்வி பத்திர அறிவித்தல் செல்லுபடி அற்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த 16.07.2025 அன்று ஒப்பந்த கேள்வி பத்திர விண்ணப்பம் திறத்தல் நிகழ்வு இடம்பெற்றதாக கூறப்படும் தினத்தில் வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர் ஒருவர் வருகை தந்து விண்ணப்பங்களை திறந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர்.
அதாவது ஒப்பந்த திறத்தல் சபைக்கு மேலதிகமாக ஒரு உத்தியோகத்தர் அந்த இடத்தில் இருந்ததால் ஒப்பந்தக்காரர்கள் தெரிவில் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்பதால் குறித்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது செல்லுபடியற்றது எனவும் எனவே மேற்படி ஒப்பந்தங்களை இரத்துச் செய்து மீளவும் ஒப்பந்தத்திற்கான விண்ணப்பம் அறிவிப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.
குறித்த பிரச்சினைகள் குறித்து தவிசாளரிடம் பேசுவதற்கு பல தடவைகள் முயற்சி செய்தும் அவர் பதிலளிக்க வில்லை.
இன் நிலையில் இது குறித்து பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரிடம் வினவிய போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
எமக்கு இது குறித்து எதுவும் தெரியாது. கடந்த 26 ம் திகதி சபையின் கன்னி அமர்வு இடம்பெற்றது அந்த அமர்வில் கூட சபையின் கவனத்திற்கு தவிசாளர் இந்த விடயத்தை தெரியப்படுத்த வில்லை.
ஊழல் அற்ற ஆட்சியை செய்வேன் சபை உறுப்பினர்களுக்கு தெரியாமல் இங்கு எந்த அபிவிருத்தி திட்டமும் நடைபெறாது என்று கூறிய தவிசாளர் ஏன் இவ்வளவு பெரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டு அதற்கான அபிவிருத்தி திட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் ஏன் குறித்த திட்டங்கள் சம்பந்தமாக சபைக்கு தெரிவிக்காமல் மறைத்தார் என்ற கேள்வி எழுகிறது இது குறித்து நாம் எதிர்வரும் சபை அமர்வில் கேள்வி எழுப்புவோம் என தெரிவித்தார்.