பொழுதுபோக்கு
அக்கா, தங்கையை திருமணம்; ஒரு டிக்கெட்டில் படம் பார்த்த அப்பா, பெரியப்பா… விஷ்ணு விஷால் சொன்ன குடும்ப கதை!

அக்கா, தங்கையை திருமணம்; ஒரு டிக்கெட்டில் படம் பார்த்த அப்பா, பெரியப்பா… விஷ்ணு விஷால் சொன்ன குடும்ப கதை!
நடிகர் விஷ்ணு விஷால் தம்பி ருத்ரா, ‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை ‘பைவ் ஸ்டார்’ திரைப்படத்தில் நடித்த கிருஷ்ண குமார் இயக்குகிறார். ருத்ரா, விஷ்ணு விஷாலின் சொந்தத் தம்பி என்று பலர் நினைத்திருந்த நிலையில், இன்று சென்னையில் நடந்த இசை வெளியீட்டு விழாவில், ருத்ரா தனது பெரியப்பா மகன் என்றும், தங்கள் குடும்பம் ஒரு கூட்டுக் குடும்பம் என்றும் கூறி, குடும்பம் குறித்த பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.விஷ்ணு விஷால் பேசுகையில், தனது அப்பாவும், பெரியப்பாவும் சிறு வயதிலிருந்தே சினிமா ரசிகர்கள் என்று குறிப்பிட்டார். குறிப்பாக, பெரியப்பாவிற்கு சினிமா மீது அதிக ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால், சிறு வயதில் அவர்களுக்குப் படம் பார்க்கப் பணம் இருக்காது.ஒரு டிக்கெட் எடுத்துக்கொண்டு பாதிப் படத்தை அண்ணனும், மீதிப் படத்தை தம்பியும் பார்த்து, பின்னர் தங்களுக்குள் கதையை விவரித்துக் கொள்வார்களாம். தனது அப்பா ஐ.பி.எஸ் ஆக வேண்டும் என்பதற்காக, பெரியப்பா கஷ்டப்பட்டு, தான் படிக்காமல் பல வேலைகளைச் செய்து அப்பாவை படிக்க வைத்ததாக விஷ்ணு விஷால் உருக்கமாகக் கூறினார்.மேலும், விஷ்ணு விஷாலின் அப்பா ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும், குடும்பத்தில் மனைவியால் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக, அந்தப் பெண்ணின் தங்கையை பெரியப்பா திருமணம் செய்ததாகவும் தெரிவித்தார். இருவரும் இன்னமும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். பெரியப்பா சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.விஷ்ணு விஷால் கிரிக்கெட் வீரராக ஆசைப்பட்டதாகவும், ஒரு விபத்தால் அது நடக்காமல் போனதாகவும் கூறினார். அப்போது, தனது பெரியப்பாதான் சினிமாவில் தான் நடிக்க காரணமாக இருந்தார் என்றும், அவரை தான் “டாடி” என்றுதான் அழைப்பேன் என்றும் தெரிவித்தார். தம்பி ருத்ரா இயக்குனர் முருகதாஸிடம் உதவியாளராக இருந்துவிட்டு இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்றும் அவர் கூறினார்.இந்த விழாவில் தனது அப்பா, பெரியப்பா, மற்றும் கதாநாயகனாக அறிமுகமாகும் தம்பி ருத்ராவை விஷ்ணு விஷால் மேடையில் அறிமுகப்படுத்தினார். அப்போது, பெரியப்பா பேச முடியாமல் கண்கலங்கினார். இந்த நிகழ்வைப் பார்த்தவர்கள், விஷ்ணு விஷால் குடும்பக் கதையை சினிமாவாகவே எடுக்கலாம் போலிருக்கிறது என்று பேசிக்கொண்டனர்.