இலங்கை
இராணுவ சிப்பாயின் கவனக்குறைவால் பலியான ஓய்வுபெற்ற ஆசிரியை

இராணுவ சிப்பாயின் கவனக்குறைவால் பலியான ஓய்வுபெற்ற ஆசிரியை
பண்டாரகமயில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கெப் வாகனத்தின் கதவை திடீரென திறந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்று அதில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஓய்வுபெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது கணவன் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் பொகுணுவிட ஹங்ச உயன பகுதியில் வசித்து வந்த 62 வயதுடைய சுமனாவதி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஆவார்.
மோட்டார் சைக்கிள் பொகுணுவிடவில் இருந்து பண்டாரகம நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நிறுத்தப்பட்டிருந்த கெப் வாகனத்தின் வலது பக்க கதவை திடீரென திறந்ததால், மோட்டார் சைக்கிள் கைப்பிடி கெப் வாகனத்தின் கதவில் மோதி வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்த பெண் பின்னால் வந்த முச்சக்கரவண்டியில் மோதி உயரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களான ஓய்வுபெற்ற இராணுவ விசேட தேவையுடைய சிப்பாயும், முச்சக்கர வண்டி சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று (30) பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
பண்டாரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.