இலங்கை
நகைக்காக இலங்கையில் நடந்த கொடூரம்! காருக்குள் வைத்து கொலை

நகைக்காக இலங்கையில் நடந்த கொடூரம்! காருக்குள் வைத்து கொலை
குருணாகல் – மஹவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியபெட்டே வனப்பகுதியில் கடந்த 26 ஆம் திகதி காருக்குள் எரிந்த நிலையில் வர்த்தகரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மாவத்தகம பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் மஹவ மற்றும் பிலெஸ்ஸ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 19 மற்றும் 27 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் இருவரும் தொரட்டியாவ மற்றும் மஹவ ஆகிய பிரதேசங்களில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் வடமேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பல பொலிஸ் குழுக்களின் கீழ் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சம்பவத்தன்று, வர்த்தகர் காரில் பயணித்துக்கொண்டிருக்கும் போது சந்தேக நபர்கள் இருவரும் காரை வழிமறித்து வர்த்தகரை காரில் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டு,
அவரிடமிருந்த 14 இலட்சம் ரூபா பணம், கையடக்கத் தொலைபேசி மற்றும் 48 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கொள்ளையிட்டு பின்னர் சடலத்தை தீ வைத்து எரித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீக்காயங்களால் உயிரிழந்த வர்த்தகர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதன் பின்னர் எரிக்கப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.
மரணித்தவர் குருநாகல் மில்லாவ பகுதியில் வசிக்கும் 49 வயதுடைய வர்த்தகர் ஆவார்.
காட்டுப் பகுதியில் ஒரு வாகனத்திற்குள் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஜீப்பின் முன் இருக்கையில் எரித்துக் கொல்லப்பட்ட நபரின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.
அந்த நபர் காணாமல் போனதாக அவரது மனைவி கடந்த 25 ஆம் திகதி தொரடியாவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மனைவியின் முறைப்பாட்டில், உயிரிழந்த நபர் சம்பவத்தன்று தலை முடியை வெட்டுவதற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக மஹவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
லங்கா4 (Lanka4)
அனுசரணை