இலங்கை
ஊழல்வாதிகள் கைதுக்கு வழியேற்படுத்தியது நாமே! விஜேதாச ராஜபக்ச பெருமிதம்

ஊழல்வாதிகள் கைதுக்கு வழியேற்படுத்தியது நாமே! விஜேதாச ராஜபக்ச பெருமிதம்
தற்போதைய அரசாங்கம் ஊழல்வாதிகளைக் கைது செய்வது நல்ல விடயம் அதற்குக் காரணம் நான்தான் என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ச.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரி வித்துள்ளதாவது-
தற்போதைய அரசாங்கம் ஊழல் மோசடிகளுக்கு எதிராக ஊழல்வாதிகளுக்கு எதிராகச் செயற்படத்தொடங்கியுள்ளது. அதற்கு அடித்தளமிட்டது நாமே. 2004ஆம் ஆண்டு சந்திரிகாவின் ஆட்சியில் ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு பிரகடனத்தில் கையொப்பமிட்டோம். அதற்கு ஏற்ப சட்டம் உருவாக்கப்பட வேண்டும். 2015ஆம் ஆண்டுவரை அதை எவரும் செய்யவில்லை. நான் அதற்கான குழுவொன்றை நியமித்து சட்டவரைவு ஒன்றைத் தயாரித்தபோது 2017ஆம் ஆண்டு என்னை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கினார்கள். 2022ஆம் ஆண்டு மே மாதம் நாம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதும் 24 மணிநேரத்தில் 21ஆம் திருத்தச்சட்ட வரைவை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தேன். ஊழல் எதிர்ப்புச் சட்டவரைவுக்கு ஒரு வாரத்துக்குள் அமைச்சரவை அனுமதியைப் பெற்றேன். ஊழல் எதிர்ப்புச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினோம். ஆசியாவில் மிகவும் சிறந்த சட்டமாக அது உள்ளது. நாம் இந்த சட்டத்தை நிறைவேற்றியதால் தான் தற்போதைய அரசாங்கத்தால் மிகவும் இலகுவாக ஊழலுக்கு எதிராக செயற்படமுடிகிறது- என்றார்.