இலங்கை
மீண்டும் திடீரென மீள அனுமதியின்றி அமைக்கப்பட்ட உப்பளம்

மீண்டும் திடீரென மீள அனுமதியின்றி அமைக்கப்பட்ட உப்பளம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபைக்குட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த உப்பளமே மீண்டும் திடீரென மீள செயற்படுத்தப்படுகின்றது.
இது தொடர்பான தகவலையறிந்து சாவகச்சேரி நகரசபை உபதவிசாளர் ஞா.கிஷோர் , சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியோர் குறித்த பகுதிக்குச் சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.
இதன்போதே ஆழ்துளை குழாய் கிணறுகள் மூலம் உப்பு உற்பத்தி பாத்திகளுக்கு நீர் இறைப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு அமைக்கப்பட்டுள்ள சுமார் 5 குழாய் கிணறுகளில் நீரும் எடுக்கப்பட்டு வருகின்றது.
அத்துடன் உப்பளம் அமைப்பதற்கு சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதியும் பெறப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
அறுகுவெளி கடல் நீரேரியில் இருந்தே உப்பு உற்பத்திக்கான நீர் எடுக்க வேண்டிய நிலையில் அதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யாமல் சட்டவிரோத குழாய்கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் தென்மராட்சியின் நிலத்தடி நீர் வளம் பாதிக்கக்கூடிய அபாயகரமான நிலை ஏற்பட்டுள்ளதால் உரிய அதிகாரிகள் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.