இலங்கை
புத்தளத்தில் பெருந்தொகையான உலர்ந்த கடலட்டைகளுடன் இருவர் கைது!

புத்தளத்தில் பெருந்தொகையான உலர்ந்த கடலட்டைகளுடன் இருவர் கைது!
புத்தளம், கற்பிட்டி – கப்பலடி கடற்பிரதேசத்தில் பெருந்தொகையான உலர்ந்த கடலட்டைகளுடன் சந்தேகத்தின் பெயரில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 37 மற்றும் 49 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நிறுவனத்தின் கடற்படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு டிங்கி படகு கண்காணிக்கப்பட்டு அதனை கடற்படையினர் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது, கடலட்டைகளை கொண்டு செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள செல்லுபடியான உரிமத்தில் 250 கிலோ கிராம் மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபர்கள் 673 கிலோ கிராம் கடலட்டைகளை சட்டவிரோதமாக எடுத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மற்றும் டிங்கி படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் மீன்பிடி அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.