இலங்கை
வவுனியா பொலிஸாரின் விகாரை அமைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்

வவுனியா பொலிஸாரின் விகாரை அமைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தம்
வவுனியா – ஓமந்தை ஏ9 வீதியில் பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள காணிக்குள் ஓமந்தை பொலிஸார் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி இன்று மதியம் அப்பகுதியில் கூடியவர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த காணி தொடர்பில் கடந்த பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
இந்நிலையில் ஓமந்தை பொலிஸாருக்கு குறித்த அரச காணியில் எவ்விதமான அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என பிரதேச செயலாளரினால் எழுத்து மூலமான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
எனினும் பொலிஸார் அதனை உதாசீனம் செய்த பொலிஸார், சுற்றி வேலி அமைக்கும் பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர்.
இதனை அடுத்து அங்கு கூடிய வவுனியா மாநகர சபை தலைவர் சு. காண்டீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தலைவர் பி. பாலேந்திரன், வவுனியா வடக்கு பிரதேச சபையின் உப தலைவர் எஸ். சஞ்சுதன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் எஸ். தவபாலன் உட்பட் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், மாநகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதோடு பொலிஸ் நிலையத்திற்குச் சென்று பொலிஸ் பொறுப்பதிகாரியுடனும் கலந்துரையாடி இருந்தனர்
இதன்போது பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த காணியில் விகாரை அமைக்கும் திட்டம் இல்லை எனவும் தமது கட்டுப்பாட்டில் 2009 ஆம் ஆண்டிலிருந்து அக்காணி காணப்படுவதாகவும் கூறியுள்ளார்.
தமது மைதான தேவைக்காகவே புனரமைப்பதாகவும் எவ்விதமான கட்டடங்களும் கட்டப்படாது எனவும் தெரிவித்ததை அடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் கலைந்து சென்று இருந்தனர்.
எனினும் காணிக்கு வேலி இடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக வவுனியா தகவல்கள் கூறுகின்றது.