இலங்கை
திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாரி மதம் பரப்பியதால் பணி நீக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாரி மதம் பரப்பியதால் பணி நீக்கம்!
உலகப் பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி கோவிலில் பணிபுரியும் உதவி நிர்வாக அதிகாரி ஒருவர் தேவாலய பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டதுடன், கிறிஸ்தவ மதத்தைப் பரப்புரை செய்ததால் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உதவி நிர்வாக அதிகாரியான ராஜசேகர் பாபு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தனது சொந்த ஊரான புத்தூரில் உள்ள உள்ளூர் தேவாலய பிரார்த்தனைகளில் கலந்துகொண்டதாகவும், கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேவாலயத்திற்குச் சென்று ராஜசேகர் பாபு பிரார்த்தனை செய்யும் வீடியோ தேவஸ்தானத்தின் கவனத்திற்கு வந்ததாக கோவில் நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்து மதம் அல்லாத மத நடவடிக்கைகளில் பங்கேற்கும் ஊழியர்கள் மீது திருப்பதி கோவில் நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னதாக, இதே போன்ற காரணங்களுக்காக ஆசிரியர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள், செவிலியர்கள் மற்றும் பிற அதிகாரிகள் உட்பட குறைந்தது 18 ஊழியர்களை இடமாற்றம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.