உலகம்
இஸ்ரேலை விமர்சித்த ஐநா அறிக்கையாளர்; தடை விதித்த அமெரிக்கா!

இஸ்ரேலை விமர்சித்த ஐநா அறிக்கையாளர்; தடை விதித்த அமெரிக்கா!
காசா மீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐ.சி.சி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐ.நா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு ஏன் என இத்தாலி கிரேக்கம் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐ.நா.வின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஐ.சி.சி தேடும் பெஞ்சமின் நெட்டன்யபாகுவிற்கு தங்கள் வான் பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைது செய்ய வேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்திருந்தார்.
மேலும், சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதனை பலவீனப்படுத்தும் அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ் கிரேக்க இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.