பொழுதுபோக்கு
2-3 வருஷம் இடைவெளி; திடீர்னு வந்து நடிக்க சொன்னார்: கணவர் பற்றி மனம் திறந்த தேவயானி!

2-3 வருஷம் இடைவெளி; திடீர்னு வந்து நடிக்க சொன்னார்: கணவர் பற்றி மனம் திறந்த தேவயானி!
90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். 2 குழந்தைகளுக்கு தாயான பிறகு சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் அக்கா, அண்ணி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். திரைப்படங்களில் கவர்ச்சி காட்டாமல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த மிக குறைவான நடிகைகளில் தேவயானியும் ஒருவர். அவர் மீது ரசிகர்களுக்கு தனி மதிப்பு இருக்கிறது.நீண்ட நாட்களுக்கு பிறகு, தன் கணவர் ராஜகுமாரன் இயக்கத்தில் வெளிவந்த நீ வருவாய் என திரைப்படத்தின் நினைவுகளை பகிர்ந்து உள்ளார் தேவயானி. இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நேர்க்காணலில் பேசிய நடிகை தேவயானி கூறியதாவது; சூர்யவம்சம் திரைப்படம் நடித்து முடித்த பிறகு நீ வருவாய் என திரைப்படத்தின் கதையை வந்து என்னிடம் கூறினார். அவரிடம் கதை நன்றாக உள்ளது இந்த திரைப்படத்தை நீங்கள் இயக்கினால் நிச்சயம் இயக்குனராக வெற்றி பெறுவீர்கள் என்று கூறினேன். அதன் பிறகு, 2 வருடங்களாக அவரை நான் பார்க்கவில்லை. அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் பிறகு, ஒருநாள் அவர் என்னிடம் வந்து என் கதை ஓகே ஆகிவிட்டது. சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நான் அந்த கதையை இயக்கவுள்ளேன். அதில் நீங்கள்தான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கேட்டார். அப்போது சிறிதும் யோசிக்காமல் உடனே, கண்களை மாற்றி வைக்கும் கதைதானே என்று கேட்டேன். உடனே அவர் மகிழ்ச்சியுடன் இப்போது மறக்காமல் வைத்திருக்கிறீர்கள் என்று கூறினார் என தேவயானி தெரிவித்துள்ளார்.இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் பார்த்திபன், அஜித், தேவயானி, ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்த நகைச்சுவை காதல் திரைப்படம் “நீ வருவாய் என.” இப்படத்திற்கு எஸ் ஏ ராஜ்குமார் இசையமைத்திருந்தார். தேவயானி, இந்தப் படத்திற்கு முன்பு பல படங்களில் நடித்திருந்தாலும், ‘நீ வருவாய் என’ படத்தில் தேவயானியின் நடிப்பு, விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது.