இலங்கை
பயங்கரவாதம் தொடர்பான விரிந்த பார்வை வேண்டாம்; ஜயம்பதி விக்கிரமரத்ன அறிவுறுத்து

பயங்கரவாதம் தொடர்பான விரிந்த பார்வை வேண்டாம்; ஜயம்பதி விக்கிரமரத்ன அறிவுறுத்து
பயங்கரவாதம் என்ற சொல்லுக்கு பரந்துபட்ட வரைவிலக்கணம் வழங்கப்படுவதானது நாட்டு மக்களும், செயற்பாட்டாளர்களும் நெருக்கடிகளுக்கு உள்ளாக இடமளிக்கும் என்று கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் ஊடாக நீண்டகாலமாக கடும் விமர்சனங்களுக்கும். எதிர்ப்புக்களுக்கும் உள்ளாகியிருக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றது. குறித்தவொரு செயற்பாடு பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணத்தினுள் உள்ளடக்கப்பட வேண்டுமாயின், அது மிகப்பயங்கரமானதொரு நடவடிக்கையுடன் தொடர்புடையதாகவோ அல்லது மிதமிஞ்சிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதாகவோ இருக்கவேண்டும்.
அதேபோன்று பயங்கரவாதத்துடன் தொடர்புடைய சில செயற்பாடுகள் வன்முறையற்றதாக அமையக்கூடும். தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் ஒருவர் அவ்வமைப்பின் இலக்கை அடைந்து கொள்ளும் நோக்கில் இலத்திரனியல் உபகரணங்கள், கணினி கட்டமைப்புக்கள் போன்றவற்றை யாரும் அறியாத வண்ணம் மறைத்து வைத்திருத்தல் போன்ற செயற்பாடுகளை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடமுடியும். இருப்பினும் சிலரது செயற்பாடுகளில் வன்முறையின் கூறுகள் தென்படினும், அவற்றைப் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டங்களின் ஊடாகக் கையாளக்கூடாது. அதுமாத்திரமன்றி. காலிமுகத்திடல் அரகலய போராட்டத்தின் போது பதிவான சில நடவடிக்கைகளை சிலர் பயங்கரவாத செயற்பாடு எனக் கூறலாம். அங்கு பதிவான சில நடவடிக்கைகள் முற்றுமுழுதாக அமைதியான முறையில் இடம்பெற்றவை அல்ல. எனினும், அவற்றைப் பயங்கரவாத செயற்பாடாக வகைப்படுத் தமுடியாது.
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களை அடுத்தே வன்முறைகள் தீவிரமாகின. எனவே, போராட்டக்காரர்களின் எதிர்வினையை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழன்றி, பொதுச்சட்டத்தின் கீழேயே கையாளவேண்டும்-என்றார்.