இலங்கை
புத்தகப்பையுடன் மீட்கப்பட்டது பெண்பிள்ளையின் என்புத்தொகுதியே; என்பு பருவவியல் ஆய்வில் தகவல்!

புத்தகப்பையுடன் மீட்கப்பட்டது பெண்பிள்ளையின் என்புத்தொகுதியே; என்பு பருவவியல் ஆய்வில் தகவல்!
செம்மணிப் புதைகுழியில் இருந்து நீலநிறப்பையுடன் மீட்கப்பட்ட என்புத்தொகுதி (எஸ்-25) பெண் பிள்ளையுடையது என்றும், அந்தப்பிள்ளை 4 அல்லது 5 வயதுடையதாக இருந்திருக்கலாம் என்றும் நீதிமன்றில் கூறப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புத்தொகுதி தொடர்பான மருத்துவ கூராய்வு ஆய்வறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனுக்கு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
அந்த அறிக்கை நீதிமன்றத்தில் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே, ‘எஸ் 25’ என அடையாளப்படுத்தப்பட்ட அந்த என்புத் தொகுதி பெண் பிள்ளையுடையது. அந்த என்புத் தொகுதி 92 சென்ரி மீற்றர் நீளமுடையது என்பதுடன், அந்தப் பிள்ளை 4 அல்லது 5 வயதுடையதாக இருந்திருக்க வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. என்பு பருவவியல் ஆய்வுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை கணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.