இலங்கை
மதுபான விலைகளில் ஏற்படவுள்ள திடீர் உயர்வு!

மதுபான விலைகளில் ஏற்படவுள்ள திடீர் உயர்வு!
உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செலவை ஈடுசெய்ய எத்தனோல் விலையை உயர்த்தியுள்ளதால் மதுபானங்களின் விலை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு லீட்டர் எத்தனோல் ரூ. 475 மற்றும் 500 வரை உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் விற்று வந்த நிலையில் தற்போது ஒரு லீட்டரின் விலையை ரூ. 800 ஆக உயர்த்தியுள்ளன.
நாட்டில் 4 உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் இருப்பதோடு, பெலவத்தை மற்றும் செவனகல தொழிற்சாலைகளை அரசுக்குச் சொந்தமானதாகும்.
அத்திமலே சீனி தொழிற்சாலையின் 50 சதவீத உரிமையை அரசு கொண்டுள்ளது.
மற்றைய தொழிற்சாலை 100 சதவீதம் தனியார் தொழிற்சாலை என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனியின் விலையிலேயே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளைச் சீனியும் விற்பனை செய்யப்படுகிறது.
குறிப்பாக உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செலவை விடக் குறைவான விலையில் உள்ளூர் சந்தைக்கு வெள்ளைச் சீனியை வழங்குவதால், ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்யும் நோக்கில், ஒரு லீட்டர் எத்தனோல் விலையை சுமார் ரூ. 300 வரை உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளன.
இதன் விளைவாக, மதுபான உற்பத்தி செலவு மாதத்திற்கு ரூ. 480 மில்லியன் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீனிக்கு 18 சதவீத மதிப்புக் கூட்டப்பட்ட வரி(வட் வரி) விதிக்கப்படுகிறது,
ஆனால் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு அதே வரி விதிக்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.