இலங்கை
ஆடிப்பிறப்பு நாளில் யாழில் இராணுவம் வழங்கிய அனுமதி

ஆடிப்பிறப்பு நாளில் யாழில் இராணுவம் வழங்கிய அனுமதி
யாழ்ப்பாணம் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினம் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பு தினமான இன்றைய தினம் (17) அனுமதி வழங்கியுள்ளனர் .
35 வருடங்களின் பின்னர் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு, கட்டுப்பாடுகள் இன்றி வழிபட கடந்த 27ஆம் திகதி அனுமதித்த இராணுவத்தினர் மீண்டும் 28ஆம் திகதி பாதுகாப்பு காரணங்கள் என கூறி ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்திருந்தனர்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.
கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்திற்கு கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்து இருந்த போதிலும் , கடுமையான கட்டுப்பாடுகளுடன் , விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு , குறித்த பாதை ஊடாக மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
அதேவேளை இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு செல்வதற்காக அப்பகுதி மக்கள் தமது சொந்த நிதியிலையே பிரத்தியோக பாதை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.