இலங்கை
எரிபொருள் கொடுப்பனவு முறையில் முறைகேடு ; அநுர அரசின் அமைச்சர்கள் தொடர்பில் வெளியான தகவல்

எரிபொருள் கொடுப்பனவு முறையில் முறைகேடு ; அநுர அரசின் அமைச்சர்கள் தொடர்பில் வெளியான தகவல்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 19 அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் இரண்டு தடவை எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டார தகவல்கள் மூலம் விடயம் தெரியவந்துள்ளது.
இவர்கள் தங்களது அமைச்சு அதேபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக் கொண்டுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உள்ளிட்ட 30 பேர் நாடாளுமன்றில் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவை இடை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கையின் அடிப்படையில் குறித்த 30 பேருக்கும் நாடாளுமன்றில் வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு கடந்த ஏப்ரல் மாதம் முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய அமைச்சர்களும் கோரிக்கை விடுத்தால் இந்த கொடுப்பனவை இடைநிறுத்த முடியும் என நாடாளுமன்ற நிதி பிரிவு தெரிவித்துள்ளது.