இலங்கை
நடந்து முடிந்ததே வரலாறு தணிக்கைக்கு இடமில்லை!

நடந்து முடிந்ததே வரலாறு தணிக்கைக்கு இடமில்லை!
தேசியத் தலைவரின் நிலை தொடர்பில் முன்னாள் போராளி பஷீர் காக்கா அறிக்கை
எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது என்ற செய்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் வேண்டும் இவ்வாறு முன்னாள் மூத்த போராளி பஷீர் காக்கா(மு.மனோகர்) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:-
2009ஆம் ஆண்டின் பின்னர் தாயகத்திலும் உலகப்பரப்பிலும் உள்ள தமிழ் பேசும் மக்களின் மனதில் எழுந்து நிற்கின்ற வினா, எமது தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பானது. பொதுவாகத் தாயகத்தில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் வரை பயணித்த மக்கள் கள நிலைமையைச் சரியாகவே புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் இனி எக்காலத்திலும் எங்கும் எம் கண்ணில் அவர் தோன்றமாட்டார் என்ற கசப்பான உண்மையைப் புரிந்து கொண்டனர். கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை மட்டுமே பார்த்து இவ்வாறான உயரிய தலைவனின் காலத்தில் வாழ்ந்தோம் பங்களித்தோம் என்ற உணர்வினைப் பெற்றனர்.
தாயகத்தில் தலைவரின் புதல்வி துவாரகாவின் வித்துடலுக்கு மண்தூவி வீர வணக்கம் செய்தவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்கையில் துவாரகாவின் பெயராலும் மோசடி செய்யும் ஈனப்பிறவிகள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது என்ற செய்தியை அனைத்துலகப் பொறுப்பாளரென ஏற்கனவே தலைவர் உத்தியோகபூர்வமாக நியமித்த கே.பி. மற்றும் அம்பாறை மாவட்டச் சிறப்புத் தளபதி ராம், பிராந்திய அரசியற்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோர் உலகுக்குத் தெரியப்படுத்தினர். அந்த நாள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியென்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் திராணி எப்போதும் போராட்டத்துக்கும் தேசியத்தலைவருக்கும் விசுவாசமாக இருப்போம் என சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைவருக்கும் இருக்க வேண்டும்.
உத்தியோகபூர்வமாகத் தலைவரால் நியமிக்கப்பட்ட இந்த மூவரும் விடுத்த அறிவித்தலை இனி எவரும் உதாசீனம் செய்யமுனையமாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஏற்கனவே நடந்து முடிந்ததே வரலாறு, இதில் தணிக்கைக்கோ சமரசத்துக்கோ இடமில்லை. பெரும்பான்மையினரின் முடிவு என்று தீர்மானிப்பதற்கு இது தேர்தல் அரசியலல்ல. நாம் எடுக்கும் முடிவுகள் இவ்வளவு காலமும் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தைப் பிரதிபலிக்கவேண்டும். வேறு எந்த சக்திகளின் முடிவுகளையும் அமுலாக்கும் விதமாக வரலாற்றை மாற்றியமைக்க முயலக்கூடாது என எமது மாவீரர் குடும்பங்களின் சார்பில் வேண்டிக்கொள்கிறேன் – என்றுள்ளது.