இலங்கை
யாழ். மாநகரசபை அமர்வு ‘பேஸ்புக்கில்’ நேரலைவிட்ட உறுப்பினருக்குக் கண்டனம்

யாழ். மாநகரசபை அமர்வு ‘பேஸ்புக்கில்’ நேரலைவிட்ட உறுப்பினருக்குக் கண்டனம்
யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வை பேஸ்புக் ஊடாக நேரலையில் ஒளிபரப்பிய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸைச் சேர்ந்த மாநகர சபை உறுப்பினருக்கு மாநகர முதல்வரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாநகரசபையின் நேற்றைய அமர்வில், உறுப்பினர்களிடையே விவாதம் நடைபெற்ற நிலையில் சபை அமர்வில் பங்கேற்ற மாநகரசபை உறுப்பினர் ஒருவர் தனது பேஸ்புக்கில் அமர்வை நேரலையில் ஒளிபரப்புச் செய்தார். இந்த விடயம் தொடர்பில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந் குறித்த விடயம் தொடர்பில் மாநகர முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.
சபை ஒழுங்கு விதிகளுக்கு மாறாக குறித்த உறுப்பினர் செயற்பட்டதால், அவருக்கு ஒரு மாதம் சபை அமர்வில் பங்கேற்க தடை விதிப்பது சம்பந்தமாக முதல்வர் சபை உறுப்பினர்களின் ஆலோசனையை கேட்டார்.
இதன்போது எழுந்த, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் இளங்கோவன் குறித்த நபர் புதிய உறுப்பினர் என்பதால் மன்னிப்பு வழங்குமாறு கோரினார். இதனையடுத்து, மாநகர முதல்வர் அந்த உறுப்பினரைக் கடுமையாக எச்சரித்ததுடன், இனி இவ்வாறு செயற்பட்டால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தினார்.