இந்தியா
16 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரயில் சேவை கட்டண உயர்வு

16 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரயில் சேவை கட்டண உயர்வு
தொழிற்சாலைகள் மற்றும் கிடங்குகளில் இருந்து பொருட்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும், ரயில்களை வழித்தடம் மாற்றுவதற்கும் இந்திய ரயில்வே துறை ஒரு மணி நேர அடிப்படையில் தனியாரிடம் என்ஜின் கட்டணம் வசூலித்து வருகிறது. இந்தக் கட்டணத்தை அடுத்த மாதம் 15-ம் தேதி முதல் உயர்த்தப்போவதாக ரயில்வே அறிவித்துள்ளது.ரயில்வே வாரியம் கடந்த 14-ம் தேதி மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையின்படி, இந்த என்ஜின் கட்டணம் 11 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளது. கடைசியாக 2009-ம் ஆண்டு இந்தக் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் அதிகரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.என்ஜினின் செயல்பாட்டு செலவு படிப்படியாக அதிகரித்துள்ளது, எரிபொருள், பராமரிப்பு, உதிரி பாகங்கள் செலவுகள் கணிசமாக உயர்ந்திருப்பதே இதற்குக் காரணம் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு பயணிகளை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களில் அதன் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜூலை 1-ம் தேதி முதல் பயணிகள் கட்டணத்தை ரயில்வே உயர்த்தியுள்ள நிலையில், தற்போது சரக்கு ரயில் சேவைகளுக்கான கட்டணத்தையும் உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.