Connect with us

பொழுதுபோக்கு

கடலில் வாழும் மச்சக் கன்னிக்கும் த்ரிஷாவுக்கு சம்பந்தம் இருக்கா? ஆனா இந்த பாட்டுல இருக்கு: கில்லி பாடல் குறித்து யுகபாரதி தகவல்!

Published

on

Yuga Bharathi about Ghilli movie Kokkarakko song Tamil News

Loading

கடலில் வாழும் மச்சக் கன்னிக்கும் த்ரிஷாவுக்கு சம்பந்தம் இருக்கா? ஆனா இந்த பாட்டுல இருக்கு: கில்லி பாடல் குறித்து யுகபாரதி தகவல்!

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் கவிஞர் யுகபாரதி. இவர் கடந்த 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த ஆனந்தம் பாடத்தில் ‘பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்’ பாடல் மூலம்  அறிமுகமானார். தற்போதுவரை 1000 சினிமா பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். தமிழ்நாடு அரசின் விருது முதல் ஏராளமான விருதுகளுக்கு சொந்தக்காராகவும் இருக்கிறார். அவரது பாடல்கள் பலவற்றில் உவமையையும், சங்கால இலக்கியங்களில் இடம் பெற்ற வரிகள் உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தி இருப்பார். இதேபோல் கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற முன்னோடிகள் ஒரு பாடலில் பயன்படுத்தி இருக்கும் முக்கிய வரிகளை எளிமையான முறையில் விளக்குவார். அந்த வரிகள் போல் தன்னுடைய பாடலில் இடம் பெறும் வரிகளையும் அவர் விளக்குவதுண்டு. அந்த வகையில், நடிகர் விஜய் – த்ரிஷா நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த கில்லி படத்திற்கு கவிஞர் யுகபாரதி பாடல்களை எழுதி இருந்தார். அந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, படத்தில் வரும் ‘கொக்கர கொக்கரக்கோ’ பாடலுக்கு ஆட்டம் போடாதவர்களே இல்லை எனலாம். இந்நிலையில், இந்தப் பாடலில் இடம் பெற்றுள்ள மற்றும் பாடலுக்கு சற்றும் பொருந்தாத வரி குறித்து கவிஞர் யுகபாரதி பேசியிருப்பார். இப்பாடல் உருவான விதம் பற்றி அவர் பேசுகையில், “கில்லி தெலுங்கில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை அடைந்த படம். தமிழில் அது ரீமேக் செய்யப்பட்டது. அதனை இயக்குநர் தரணி இயக்கினார். இசை வித்யாசாகர் அமைத்தார். அவர்கள் என்னை அழைத்து பாடல் எழுத சொன்னபோது, நான் படத்தை பார்த்து விட்டானா என கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். அப்படத்தில் ‘செப்பேவ் சிறுகலி’ என்கிற மெலோடி பாடல் இடம் பெற்று இருக்கும். ‘கொக்கர கொக்கரக்கோ’ பாடலுக்கான தெலுங்கு வெர்சன் அது. நான் அவர்களிடம் தெலுங்கு எனக்கு முழுசாக புரியாது, ஆனால் அந்த இடத்துக்கு என்ன பாடல் என்ன என்பது எனக்கு புரிந்து விட்டது என்றேன். செப்பேவ் சிறுகலி அர்த்தம் பற்றி அவர்கள் செல்லுகையில், பொழுது விடிகிறது, அந்தப் பெண்ணுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது என்றார்கள். இதனை மனதில் கொண்டு நான் பாடல் எழுத தொடங்கிய போது, வித்யாசாகர் மேசையில் இருந்தபடி தாளம் போட்டார். அப்போது நான் வரிகளை சொன்னேன். செப்பேவ் சிறுகலி வரிக்கு ஏற்றால் போல், ‘கொக்கர கொக்கரக்கோ சேவல் கொக்கரக்கோ என்று எழுதினேன். அப்படியே எழுதிக் கொண்டிருக்கும் போது, சுறாங்கனிக்க மாலு கெனவா என்ற வரியை எழுதினேன். அந்த வரி அவர்களுக்கு பிடித்துப் போனது. ஆனால், அந்த வரியின் அர்த்தம் எங்கள் யாருக்கும் தெரியவில்லை. எனக்கு சிங்கள பாடல் கேட்பது பழக்கம் என்பதால், அந்த தளத்திற்கு ஏற்ப எப்போதோ கேட்ட அந்த வரியை எழுதினேன். இதன் அர்த்தம் பற்றி என்னிடம் அவர்கள் கேட்கையில், நான் இந்தப் பாடலை பாடியவர் சிலோன் மனோகர். அவரிடம் கேட்கலாம் என, இப்பாடலை எழுதி பாடிய மனோகரை தொடர்பு கொண்டோம். அவர் அப்போது பட வாய்ப்பு தேடித் கொண்டிருந்தார். இயக்குநர் அவரிடம் பேசும் போது அவர் பட வாய்ப்பு பற்றி தான் பேசினாரே தவிர, நான் எழுதிய வரியின் அர்த்தம் பற்றி சொல்லவே இல்லை. கடைசியாக, சிலோன் மனோகர் எங்களிடம், சுறாங்கனிக்க மாலு கெனவா என்ற வரிக்கு ‘கடலில் வாழும் ஒரு மச்சக்கன்னி’ என்றார். அப்படி, கடலில் வாழும் அந்த மச்சக்கன்னிக்கும், நகரில் வாழும் நடிகை த்ரிஷாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், சம்பந்தம் இல்லாமல் அந்தப் பாடலில் அந்த வரி இருக்கும். ஏன்னெனில், எழுத்துப் போக்கில் வரக்கூடிய ஒரு செய்தியை அப்படியே இந்த மாதிரியான துள்ளல் இசைப் பாடலுக்கு பயன்படுத்துவது முக்கியம்” என்று கவிஞர் யுகபாரதி கூறியுள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன