இலங்கை
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலைத் தடுக்கத் தவறிய நிலந்தவின் வேலைக்கு வேட்டு; பொலிஸ் ஆணைக்குழு ‘தடால்’ முடிவு

உயிர்த்த ஞாயிறுதின தாக்குதலைத் தடுக்கத் தவறிய நிலந்தவின் வேலைக்கு வேட்டு; பொலிஸ் ஆணைக்குழு ‘தடால்’ முடிவு
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் கடமை தவறினார் என்று இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களிலும் அவர் குற்றவாளி என்பதைக் கண்டறிந்ததை அடுத்து அவரை உடனடியாகப் பொலிஸ் சேவையில் இருந்து நீக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கடமை தவறினார் என்று நிலந்த குற்றம் சாட்டப்பட்டிருந்தார். அதையடுத்து அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார். அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் முன்னெடுக்கப்பட்டது. முறையான ஒழுங்கு விசாரணையின் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயத்தால் 2025.07.04 அன்று தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முறையான ஒழுங்கு விசாரணை அறிக்கை. முறைப்பாட்டைக் கையாளும் அதிகாரியின் அறிக்கை. பாதுகாப்பு அதிகாரியின் அறிக்கை மற்றும் அந்த அறிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு ஆய்வு செய்தது.
முறையான ஒழுக்காற்று விசாரணை அறிக்கையின்படி குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்த்தன குற்றவாளி எனக் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கூறிய குற்றச்சாட்டுகள், நிறுவனக் குறியீட்டின் வகை || இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பொது அதிகாரிகளால் செய்யக்கூடிய குற்றங்கள் தொடர்பான முதல் அட்டவணையின் கீழ்வரும் குற்றங்கள் ஆகும். அதன்படி 2025.07.17 அன்று கூடிய தேசிய பொலிஸ் ஆணைக்குழு மேற்குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் நிலந்த ஜயவர்த்தனவே குற்றவாளி எனத்தீர்மானித்தது.
அதன்படி, அவர் செய்த குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 2025.07.17 அன்று நடைபெற்ற தேசிய பொலிஸ் ஆணைக்குழு அமர்வில், உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்த்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.