இலங்கை
இரு பிரதான கட்சிகளுக்கு இடையிலே வாகன விற்பனை!

இரு பிரதான கட்சிகளுக்கு இடையிலே வாகன விற்பனை!
கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சியிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சட்டத்துக்கு புறம்பாக வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
களுத்துறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்கத்திலிருந்த அமைச்சர் ஒருவர் எதிர்கட்சியிலிருந்த நாடுளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வாகனம் ஒன்றை விற்பனை செய்துள்ளார். இருவரும் பிரதான இரு கட்சிகளை சேர்ந்தவர்கள்.
அவர்கள் ஆட்சியிலிருந்தமையால் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது இரகசியமாக சட்டத்துக்கு புறம்பாக வானக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ளனர்.
அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
களுத்துறை மாவட்டத்தில் உள்ள 10-12 சதவீதமானோர் வீடுகளின்றியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் 155 குடும்பங்களுக்கு வீட்டு நிர்மாணத் திட்டத்துக்கான நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
இதற்காக 155 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றில் 42 மில்லியன் ரூபா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதிகளை சேர்ந்த 4 ஆயிரம் குடும்பங்களின் இருப்பிடங்கள் தொடர்பான சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வுக்காண வேண்டியுள்ளது.
அதற்கமைய இங்கிரிய றைகம தோட்டத்தில் உள்ள 25 குடும்பங்களுக்கு இந்திய காப்புறுதி வீட்டுத் திட்டத்தின் கீழ் 70 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வீடமைப்பு நிர்மாண அதிகார சபையின் நிதியுதவி மற்றும் கடன் உதவி திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட வீடமைப்புத் தொடர்பான விசேட திட்டமும் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் அரச ஊழியர்களுக்காக தொடர்மாடிக் குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்கவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.