இலங்கை
தோட்டத் தொழிலாளரை கைவிட்டது அரசாங்கம்; மனோ எம்.பி. சுட்டிக்காட்டு

தோட்டத் தொழிலாளரை கைவிட்டது அரசாங்கம்; மனோ எம்.பி. சுட்டிக்காட்டு
வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குறுதியளித்த 1700 ரூபா சம்பள அதிகரிப்பு இது வரை வழங்கப்படவில்லை. அதனால் தோட்டத்தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது எனத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோகணேசன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:- நாட்டின் பிரதான தொழிலாளர்களான தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் கைவிட்டுள்ளது. அவர்களுக்காக கவலைப்பட்டுக் கதைக்கின்றார்களே தவிர அவர்களின் தேவைகள் எதனையும் நிறைவேற்றுவதில்லை. வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து ஜனாதிபதி உரையாற்றுகையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஆனால் அவ்வாறு எதுவும் அதிகரிக்கப்படவில்லை. திட்டமிட்டு அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அதனால் இது தொடர்பில் அரசாங்கம் கவனஞ்செலுத்த வேண்டும்- என்றார்.