இலங்கை
செம்மணியில் நூற்றுக்கணக்கானோர் கொலை; இராணுவ அதிகாரிகளின் சாட்சியம்!

செம்மணியில் நூற்றுக்கணக்கானோர் கொலை; இராணுவ அதிகாரிகளின் சாட்சியம்!
யாழ் செம்மணி மனிதப் புதைக்குழியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள் வெளி வருகின்ற நிலையில் சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை நிலை நாட்ட முடியும் என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசுவாமி தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1996 ஆம் ஆண்டு செம்மணி மனிதப் புதைகுழி தோண்டப்பட்ட நிலையில் பதினைந்து மனித எலும்புக்கூடுகள் மட்டும்தான் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது 80 மனித எலும்புக் கூடுகளை கடந்து விட்டது.
ஏற்கனவே செம்மணி புதை குழி வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இராணுவ அதிகாரிகள் குறித்த பகுதியில் 600 வரையான சடலங்கள் இருப்பதாக சாட்சியம் வழங்கியுள்ளார்.
இதன் அடிப்படையில் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அதனை கண்காணிப்பதற்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏனெனில் இலங்கை பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் பாரிய மனித எச்சங்கள் வெளி வருகின்ற நிலையில் அதனை மூடி மறைப்பதற்கு அரசாங்கம் முயலக்கூடும்.
இந்நிலையில் தற்போது அகழ்வுப் பணிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் அரசாங்கம் அகழ்வப் பணிக்கான நிதிகளை தடையின்றி வழங்க வேண்டும்.
ஆகவே குறித்த புதை குழி தொடர்பில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிய நீதி கிடைப்பதற்கு சர்வதேச விசாரணையை மேற்கொள்வதே சிறந்த தீர்வுக்கு வழிவகுக்கம் என அவர் மேலும் தெரிவித்தார் .