இலங்கை
வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகள் தொடர்பில் வெளியான தகவல்

வெளிநாடுகளில் மறைந்திருக்கும் இலங்கை குற்றவாளிகள் தொடர்பில் வெளியான தகவல்
நாடு கடந்த குற்றவியல் வலையமைப்புகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெளிநாடுகளில் மறைந்திருக்கும் 67 இலங்கையர்களுக்கு சர்வதேச காவல்துறையின் (Interpol) சிவப்பு அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த நபர்களில் சிலர் போலி கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி கண்டறிதலைத் தவிர்க்க முயற்சிப்பதாகவும், இதனால் அவர்களின் சரியான இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இருப்பினும், அவர்களில் பலர் தற்போது எந்தெந்த நாடுகளில் பதுங்கியிருக்கிறார்கள் என்பதை புலனாய்வுத்துறை வெளிப்படுத்தியுள்ளது எனவும் குறிப்பிட்டார்.
அவர்களைக் கைது செய்து நாடு கடத்துவதை எளிதாக்குவதற்காக இலங்கை அரசாங்கம் தற்போது அந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சுகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார்.
சமீபத்திய மாதங்களில் சுமார் 20 சந்தேக நபர்கள் ஏற்கனவே வெற்றிகரமாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நாட்டின் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒப்பந்தக் கொலைகளில் கணிசமான பகுதியினர் இந்த வெளிநாடுகளை தளமாகக் கொண்ட குற்றவியல் குழு உறுப்பினர்களால் திட்டமிடப்படுவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
குற்றப் புலனாய்வுத் துறை இந்த வலையமைப்புகள் குறித்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
அதே நேரத்தில் இந்த குற்றவாளிகளுக்கு போலி கடவுச்சீட்டுக்களை உருவாக்க உதவியதாக சந்தேகிக்கப்படும் குடிவரவு அதிகாரிகள் மீது தனி விசாரணை நடந்து வருவதாகவும் அமைச்சர் தெரவித்தார்.