இலங்கை
செம்மணிப் புதைகுழி; 5 என்புத் தொகுதிகள் நேற்று முற்றாக மீட்பு!

செம்மணிப் புதைகுழி; 5 என்புத் தொகுதிகள் நேற்று முற்றாக மீட்பு!
அரியாலை செம்மணி மனிதப் புதைகுழியில், நேற்று முன்னெடுக்கப்பட்ட பணிகளின்போது ஐந்து என்புத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி மீதான இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 22ஆம் நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே. ஐந்து என்புத்தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, இதுவரை 95 மனித என்புத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நேற்றையதினம் விடுமுறை என்பதால் அரைநாள்கள் மாத்திரமே அகழ்வுப்பணிகள் இடம்பெற்றன. புதிதாக என்புத் தொகுதிகள் எவையும் அடையாளப்படுத்தப்படவில்லை.
நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்களும், மற்றும் கலைப்பீட தொல்லியற்துறை மாணவர்களும் அகழ்வுப் பணிகளின்போது முன்னிலையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.