பொழுதுபோக்கு
அவன் சினிமா பைத்தியம்; பட்டினியாக இருந்த நண்பர்களுக்காக இந்த தில்லு முல்லு செய்வான்; கேப்டன் பற்றி ராதாரவி ஓபன் டாக்!

அவன் சினிமா பைத்தியம்; பட்டினியாக இருந்த நண்பர்களுக்காக இந்த தில்லு முல்லு செய்வான்; கேப்டன் பற்றி ராதாரவி ஓபன் டாக்!
தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆருக்கு இணையான வள்ளல் குணம் கொண்ட மனிதராக விஜயகாந்தை பலரும் கூறுவார்கள். அந்த அளவிற்கு தன்னை தேடி வருபவர்களுக்கு ஏராளமான உதவிகளை விஜயகாந்த் செய்திருக்கிறார். மேலும், தனது அலுவகலத்தில் எப்போதுமே ஏழைகளுக்கு உணவளிக்கும் வழக்கத்தை இறுதிவரை விஜயகாந்த் கடைபிடித்தார்.மதுரையில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த விஜயகாந்த் சினிமா மீது கொண்ட அதீத ஆர்வத்தால், சென்னைக்கு வந்து பல்வேறு தயாரிப்பு நிறுவனங்களில் வாய்ப்பு தேடி அலைந்ததாக பலர் கூறியுள்ளனர். இதன் மூலம் சினிமா மீது அவருக்கு இருந்த பிணைப்பை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு கட்டத்தில் நட்சத்திர அந்தஸ்தை அடைந்த விஜயகாந்த், அதன் பின்னரும் மற்றவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்தவில்லை. மாறாக, அதிகமாக உதவி செய்யத் தொடங்கினார்.தனது படப்பிடிப்புகளில் சக நடிகர்கள் தொடங்கி அனைத்து பணியாளர்களுக்கும் சுவையான உணவு கிடைப்பதை விஜயகாந்த் உறுதி செய்தார். குறிப்பாக, தான் சாப்பிடும் உணவு வகைகள் அனைத்தும் மற்றவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதற்காக தனது சம்பளத்தில் இருந்து தொகையை எடுத்துக் கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்களிடம் விஜயகாந்த் அறிவுறுத்தியதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு பசியுடன் இருக்கும் தனது நண்பர்களுக்கு சாப்பாடு வாங்குவதற்கு, விஜயகாந்த் செய்த செயல்களை அவரது நண்பரும், முன்னணி நடிகருமான ராதாரவி நினைவு கூர்ந்துள்ளார்.அதன்படி, “விஜயகாந்த் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஏழ்மை நிலையில் இருந்து வந்தவர் கிடையாது. மதுரையில் ரைஸ் மில் ஆகியவை விஜயகாந்திற்கு இருந்தன. ஆனால், அவை அனைத்தையும் விட்டுவிட்டு, சினிமா பைத்தியம் காரணமாக இந்த துறைக்கு விஜயகாந்த் வந்தார். சினிமா மீது அந்த அளவிற்கு வெறி இருந்தது.அந்த சூழலில் விஜயகாந்துடன் இருந்த நண்பர்கள் பசியால் இருந்தால், அவர்களுக்கு சாப்பாடு வாங்குவதற்காக சில விஷயங்களை விஜயகாந்த் செய்வார். குறிப்பாக, ஆந்திராவில் இருந்து இங்கு சீட்டு ஆடுவதற்காக சிலர் வருவார்கள். அப்போது, அவர்களுக்கு தெரியாமல், ஐந்து சீட்டுகளை விஜயகாந்த் மொத்தமாக எடுத்துக் கொள்வார். அந்த சீட்டாட்டத்தில் வென்ற பணத்தில் தனது நண்பர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தவர் விஜயகாந்த்” என நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.