இலங்கை
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்குக் கட்டுப்பாடுகள்; வலியுறுத்துகின்றார் சட்டத்தரணி அம்பிகா

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்குக் கட்டுப்பாடுகள்; வலியுறுத்துகின்றார் சட்டத்தரணி அம்பிகா
புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்த வேண்டும் என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும், ஐ.நா. முகவரகத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர்நீதி அமைச்சுக்கு அனுப்பியுள்ள பரிந்துரைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் நீதிமன்றத்தின் அல்லது நாடாளுமன்றத்தின் அனுமதியின்றி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல்,சில இடங்களை தடைசெய்யப்பட்ட பகுதிகளாக வரையறுத்து மக்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தல் போன்ற அறிவிப்புகளை வெளியிடுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படக்கூடாது . சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டத்தின் 9 ஆவது பிரிவானது ஒருநபரைக் கைது செய்வதற்கோ அல்லது தடுத்துவைப்பதற்கோ சட்டத்தின் ஊடாக வரையறுக்கப் பட்ட நியாயமான காரணம் இருக்கவேண்டும் எனவும், அவ்வரையறையானது மிகத்தெளிவாக போதிய விளக்கத்தைத் தரக்கூடியவகையில் அமைய வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.
அதேவேளை, ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லுக்கான வரைவிலக்கணம் நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அத்தோடு அந்த வரைவிலக்கணமானது குறிப்பானதாகவும், உரிய சட்டக்கோட்பாடுகளுக்கு உட்பட்டதாகவும் அமையவேண்டும்.
அதேவேளை இந்த வரைவிலக்கணம் ‘தேசிய, இன மற்றும் மத வெறுப்புணர்வு’ அல்லது ‘ஒடுக்குமுறை வன்முறை’ அல்லது ‘அத்தியாவசிய சேவை வழங்கலுக்கான இடையூறு’ போன்ற பரந்துபட்ட விளக்கத்தை உள்ளடக்கியிருக்கக்கூடாது. முன்னைய அரசாங்கங்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைபுகளில் இவ்வாறான பதங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. இவை கருத்து முடக்குவதற்கும். தொழிற்சங்க நடவடிக்கை போன்ற சட்ட ரீதியான சிவில் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கும் பயன்படுத்தப்படக்கூடும் – என்றுள்ளது.