உலகம்
ரஷ்யாவில் நிலநடுக்கம் பல நாடுகளில் சுனாமி!

ரஷ்யாவில் நிலநடுக்கம் பல நாடுகளில் சுனாமி!
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தை நேற்றுக்காலை 8.8 ரிக்டர் அளவில் தாக்கிய நிலநடுக்கத்தால், உலகின் பல்வேறு நாடுகளை சுனாமி அலைகள் தாக்கியுள்ளன. இதனால், அனேகமான நாடுகள் கிலி கொண்டிருக்கின்றன. ரஷ்யாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் இதுவரை உலகைத்தாக்கிய நிலநடுக்கங்களில் ஆறாவது வலிமையான நிலநடுக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, ரஷ்யா, ஜப்பான், சீனா, அமெரிக்கா, கனடா, கியூபா ஆகிய நாடுகளில் அடுத்தடுத்து சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளன.
ரஷ்யாவின் அதிநவீன கட்டமைப்பு, நிலநடுக்கம் தொடர்பில் உரிய எச்சரிக்கையைத் துரிதமாக வழங்கியதால், உடனடியாக முற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால், ரஷ்யாவிலும் ஏனைய நாடுகளிலும் உயிரிழப்புக்கள் பதிவாகவில்லை. ‘இப்படியொரு பெரிய நிலநடுக்கத்தை எதிர்கொண்ட பின்னரும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பது நம்பமுடியாத அசாதாரண விடயம். இதற்காக கடவுளுக்கு நன்றி’ என்று ரஷ்ய அரசாங்கத்தின் பேச்சாளர் டிமிட்றி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிலநடுக்கத்தால் அதிகளவு பாதிப்பை எதிர்கொண்ட நாடாக ஜப்பான் காணப்படுகின்றது. அங்கு ஒன்பது இலட்சம் மக்களை வெளியேறுமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.