இலங்கை
வவுனியா மாநகரசபை அமர்வில் பெரும் சர்ச்சை; ஊடகவியலாளர்களை விமர்சித்த முதல்வர்

வவுனியா மாநகரசபை அமர்வில் பெரும் சர்ச்சை; ஊடகவியலாளர்களை விமர்சித்த முதல்வர்
வவுனியா மாநகரசபையின் இன்றைய (31 ஜூலை 2025) அமர்வில், முதல்வர் சு.காண்டீபன் ஊடகவியலாளர்களை நேரடியாக விமர்சித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை 9.30 மணி அளவில் ஆரம்பமான சபை அமர்வு, ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிப்புக்காக வந்திருந்த நிலையில், மதியம் 2 மணியுடன் அவர்கள் விலகிய பின், முதல்வர் சபை உறுப்பினர்களை இருத்தி வைத்தபடியே ஊடகங்களை குறிவைத்து விமர்சித்தார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எனக்கு வாக்களிக்காதவர்களை நீ பழிவாங்குகிறாயா என என்னிடம் பலர் கேட்கிறார்கள். நான் அரசியல் பழிவாங்கல் செய்ய வேண்டியவர் அல்ல. ஊடகங்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும்.
யார் ஊடக சந்திப்பு வைக்கிறார்கள் என்றாலும் என்னையும் அழைக்க வேண்டும். நான் பக்கத்தில் வந்து பதில் கூறுவேன். என்னை தவிர்த்து பேசும் பாணி சரியானதல்ல.”
மேலும், அவர் ஊடக சந்திப்புகள் சில “விசமத்தனமானவை” என்றும், சில ஊடகவியலாளர்கள் “பக்க சார்பாக” செயற்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
“நான் இரு வேலைகள் செய்வதால், வீடு செல்வதற்கே இரவு 10 மணி ஆகிறது. இப்படிப்பட்ட ஊடக சந்திப்புகளுக்கெல்லாம் பதில் சொல்ல நான் நேரம் வீணாக்க முடியாது,” என கூறியுள்ளார்.
இவ்வகையான கருத்துக்கள் சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகச் சங்கங்களிடையே கடும் விமர்சனத்திற்குள்ளாகும் நிலையில், சபை அமர்வில் நேரத்தை மீறி இந்தப் பேச்சு இடம்பெற்றது தொடர்பாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வவுனியா மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளிலிருந்து தனித்துவமாக செயல்பட முயல்கின்றனர் என்றாலும், சிலர் மீது “பக்க சார்பு” குற்றச்சாட்டு எழுப்பப்படுவதும் வழக்கமாகவே உள்ளது. இந்நிலையில், மாநகரசபை அமர்வில் முதல்முறையாக நேரடியாக ஊடகவியலாளர்களை குறிவைத்து விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.