இலங்கை
யாழ் வந்த பிரதமர் ஹரிணி : புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

யாழ் வந்த பிரதமர் ஹரிணி : புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து முக்கிய கலந்துரையாடல்!
இலங்கையின் புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.
கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு இன்று (02) யாழ் – கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலாளரின் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இலங்கை கல்விச் சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பிலான தெளிவூட்டல் கலந்துரையாடலானது பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுபோவ, வடக்கின் பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரங்சன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், கல்விப்புலம் சார் அதிகாரிகள், புத்திஜீவிகள் என பலர் கலந்துகொண்டனர்.
2026 ஆம் ஆண்டு முதல் நாட்டின் பாடசாலைக் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவரும் முகமாக கல்விச் சமூகத்தின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நடைபெறும் கலந்துரையாடல்களின் ஓர் அங்கமாகவே இந்த கலந்துரையாடலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.