இலங்கை
அறுகம்பேவில் அதிகரிக்கும் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் ; வெளியான முக்கிய தகவல்

அறுகம்பேவில் அதிகரிக்கும் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் ; வெளியான முக்கிய தகவல்
அறுகம்பே மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டுவரும் வணிகங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(5) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
அதன்போது இலங்கையில் அறுகம்பே, வெலிகம மற்றும் உனவட்டுன போன்ற பகுதிகளில் அதிகரித்துவரும் இஸ்ரேலியப்பிரஜைகளின் ஆதிக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேபோன்று வாராந்தம் ஒருமுறை இஸ்ரேலியர்கள் கூடும் இடத்துக்கு அவ்வேளையில் பாதுகாப்பு வழங்கப்படுவதற்குக் காரணம் சுற்றுலாப்பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதனாலேயே தவிர, வேறெந்த விசேட பாதுகாப்பும் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு சுற்றுலாப்பயணிகளாக நாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உரிய அனுமதிபெறாமல், சட்டவிரோதமான முறையில் நடாத்தப்பட்டுவரும் வணிகங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அத்தோடு இலங்கைக்கு வருகைதரும் இஸ்ரேலிய விமானங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தீர்மானம் கடந்த 2023 ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தில் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும், அத்தீர்மானமே தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.