இலங்கை
மஹிந்தவை கொழும்பில் இருந்து வெளியேற்றச் சதி; குற்றம் சுமத்தும் பெரமுன

மஹிந்தவை கொழும்பில் இருந்து வெளியேற்றச் சதி; குற்றம் சுமத்தும் பெரமுன
முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியம் உட்பட வரப்பிரசாதங்களை இல்லாது செய்வதற்கு அரசு முன்னெடுக்கும் நடவடிக்கை அரசியல் பழிவாங்கல் செயல் என பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் கொழும்பில் இருந்து மெதமுலனவுக்கு வெளியேற்றும் அரசியல் பழிவாங்கல் திட்டமே இதன் பின்னணியில் உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு மக்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கையில், அவற்றுக்குத் தீர்வுகளைத் தேடாமல், முன்னாள் ஜனாதிபதிகள் மீது அரசின் கவனம் திரும்பியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வரப்பிரசாதங்களை வழங்கும் நடைமுறை உலக நாடுகளில் உள்ளது.
எனவே, முன்னாள் ஜனாதிபதிகளைப் பழிவாங்கும் நோக்கில் இங்கு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறிப்பாக ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை இலக்கு வைத்து அல்ல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பழிவாங்கும் நோக்கில், அவரைக் கொழும்பில் இருந்து அகற்றி மெதமுலனவுக்குள் முடக்கும் முயற்சியே இடம்பெறுகின்றது.
எனவே, மஹிந்தவைக் கொழும்பில் இருந்து வெளியேற்றும் சட்டமூலம் என இதற்குப் பெயர் வைப்பதே பொருத்தமானதாக அமையும். இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் அது முன்னாள் ஜனாதிபதிகளுக்குச் செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழும்.
எனவே, ஜனாதிபதி அநுர உட்பட இனிவரும் ஜனாதிபதிகளுக்குத்தான் அது ஏற்புடையதாக அமையும். அவ்வாறு இல்லையேல் சர்வஜன வாக்கெடுப்பு உட்பட அரசமைப்பு மாற்றம் ஊடாகவே இதற்குரிய நடவடிக்கை இடம்பெற வேண்டும் என்றும் சட்டத்தரணி மனோஜ் கமகே கூறினார்.